வரலாற்றுக்காலம்
நாயக்கர்
கூடுதல் விவரங்கள்
கோட்டை கொத்தளம் என்றழைக்கப்படும் இக்கட்டடம், மதுரையில் உள்ள பாண்டியர் கோட்டையைச் சுற்றி வெளிப்புறத்தில், நாயக்கர்கள் கட்டிய மிக உறுதியான கோட்டையின் ஒரு பகுதியாகும். பொது ஆண்டு 1530இல் இக்கோட்டை கட்டப்பட்டது. மதுரையைச் சுற்றி 72 பாளையங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒரு கொத்தளம் கட்டப்பட்டது. இந்த 72 கொத்தளங்களின் கீழும், மேலும் 50 – 100 வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்கள் வைப்பதற்கும் அறைகள் உள்ளன. இப்போது கீழ்த்தளத்தில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
மதுரைக் கோட்டையை முற்றுகையிடப் பல மன்னர்கள் முயன்றனர். பொது ஆண்டு 1790களில் திண்டுக்கல்லை வென்றுவிட்டுச் சோழவந்தானில் வந்து காத்திருந்த திப்பு சுல்தானால் மதுரையை வெல்ல இயலவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி ஆவணி மூல வீதிகளில் கோட்டைச் சுவரும், நேதாஜி சாலையில் பெரிய அகழியும் இருந்துள்ளது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கோட்டை ஜோகன் பிளாக்பர்ன் என்ற கலெக்டரால் நகர விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டது. இக்கோட்டையை இடிக்கும் பகுதியில் அதை இடித்த மக்களே குடியேறிக் கொள்ளலாம் என்ற அறிவிப்போடு இக்கோட்டையை இடித்து அகழிகளை மேவினார். கோட்டையின் எச்சமாகத் திகழும் இந்தக் கொத்தளம் இச்சமயம் அரசு அலுவலகமாக மாற்றம் பெற்றுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அமைவிடம்
பெரியார் பேருந்து நிலையம் எதிரில்
ஊர்
மதுரை
மாவட்டம்
மதுரை