Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தூய வியாகுல அன்னை திருத்தலம்

Our Lady of Dolours Church

தேவாலயத்தின் வகை

ரோமன் கத்தோலிக்க ஆலயம்


வேறு பெயர்கள்

’அவர் லேடி ஆஃப் டொலோர்ஸ்’ (Our Lady of Dolours) மற்றும் லேடி ஆஃப் செவன் டொலோர்ஸ் (OUR LADY OF SEVEN DOLOURS CHURCH)


அமைவிடம்

மேட்டுப்பட்டி


ஊர்

மேட்டுப்பட்டி

மாவட்டம்

திண்டுக்கல்

ஆலயத்தின் சிறப்பு
’அவர் லேடி ஆஃப் செவன் டொலோர்ஸ்’ (OUR LADY OF SEVEN DOLOURS CHURCH) எனப்படும் இந்தத் தேவாலயம், தன் மகனான இயேசுவின் மரணத்துக்கு வருந்தும் தாய் மேரிக்காக உருவாக்கப்பட்ட திருச்சபை ஆகும். இவ்விடத்தில் சுமார் 300 ஆண்டுகளாக இந்தத் தேவாலயம் செயல்பட்டு வருகிறது.
வழிபாடு
வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 'நொவேணா' (Novena) எனப்படும் ஒன்பது நாள் வேண்டுதல் வழிபாடு மற்றும் பிரார்த்தனை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் 'நற்கருணைத் திருவிருந்து' (eucharistic celebration), தேர் ஊர்வலம், இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு ஊர்வலம் செல்லுதல், பௌர்ணமி அன்று திருப்பலி (mass), மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரவு முழுவதும் பிரார்த்தனை மற்றும் லென்டென் (Lenten) காலத்தில் தெருக்களில் திருப்பலி நடத்தப்படுகிறது.
வழிபாட்டுக் காலம்
நாள்தோறும் அதிகாலை 5:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை வழிபாடு நடைபெறுகிறது. புனித வெள்ளி அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
இங்கு ’பாஸ்கா’ (Passover) எனப்படும் யூத விழா 300 ஆண்டுகளாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 'பாஸ்கா' என்றால் கடந்து செல்லுதல் என்று பொருள். இவ்விழா ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. விழாவில் பங்கேற்கச் சுற்றியுள்ள 96 ஊர்களில் இருந்தும் மக்கள் கூடுகின்றனர். இவ்விழாவின் முதல் நாள் அன்று இயேசுவின் இறந்த உடல் போன்ற வடிவத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். விழாவின் மூன்றாம் நாள் தேர் ஊர்வலம் நடைபெறுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
பழைய தேவாலயக் கட்டடத்தில் ’பொது ஆண்டு 1701-2001’ என்று குறிப்பிடும் 300 ஆண்டு விழாக் கல்வெட்டு உள்ளது.
சிற்பங்கள்
கடவுள்களும் புனிதர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
ஆலய வரலாறு / கதைகள்
’அவர் லேடி ஆஃப் டொலோர்ஸ்’ (Our Lady of Dolours) என்ற இந்தக் கிறித்தவத் தேவாலயம் பொது ஆண்டு 1606ஆம் ஆண்டில், இவ்விடத்தில் ஒரு சிறிய தேவாலயமாக அமைக்கப்பட்டு விசுவாசிகளால் வழிபாடு செய்யப்பட்டு வந்தது. பின்னர் பொது ஆண்டு 1701இல் இவ்விடத்திற்கு அருகில், வேறு ஒரு புதிய தேவாலயக் கட்டடம் கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டது. இந்தத் தேவாலயம் பொது ஆண்டு 1729ஆம் ஆண்டு திருத்தந்தை ஜான் அலெக்சாண்டர் அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. பொது ஆண்டு 1902ஆம் ஆண்டு மேட்டுப்பட்டியில் உள்ள ’லேடி ஆஃப் செவன் டொலோர்ஸ்’ தேவாலயத்திற்கு அருகில் மணிக் கோபுரம் அமைக்கப்பட்டது. இன்றும் மணியின் ஒலி விசுவாசிகளை ஈர்க்கிறது.

பொது ஆண்டு 1907ஆம் ஆண்டு ரெவெரெண்ட் எம்.வி.டிசொஸா என்பவர் தேவாலயத்திற்கு அருகில் புனித பிலோமினா முதியோர் ஆதாரப்பள்ளி (முதியோர்களுக்கான பள்ளி) ஒன்றைத் தொடங்கி ஆன்மீக ஊழியத்துடன் இணைந்து சமூகப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். ரெவெரெண்ட் ஃபாதர் மைக்கேல் என்பவர் பொது ஆண்டு 1945ஆம் ஆண்டு மேட்டுப்பட்டி மக்களின் கல்வியின் தேவையை உணர்ந்து ’செயின்ட் சேவியர் தொடக்கப் பள்ளியைத்’ தொடங்கினார். பின்னர் மேட்டுப்பட்டியில் நடுநிலைப் பள்ளி ஒன்றையும் தொடங்கினார். தேவாலயத்திற்கு அருகில் பெண்களுக்கான ’பாத்திமா ஆசிரியர் பயிற்சிப் பள்ளி’ ஒன்றையும் நிறுவினார்.

மேட்டுப்பட்டியில் இப்போதுள்ள புதிய தேவாலயக் கட்டடத்திற்குப் பொது ஆண்டு 1962ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி பிஷப் ஜேம்ஸ் மெண்டோன்கா என்பவர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பொது ஆண்டு 1967 ஜூலை 23 அன்று, இந்தத் தேவாலயத்தை அவரே புனிதப்படுத்தினார்.
தேவாலயத்தின் அமைப்பு
இந்தத் தேவாலயத்தின் முகப்புப் பகுதியில் ஏழு வாள்களால் துளைக்கப்பட்ட இதயத்தின் சுதைச் சிற்பம், தேவதைகளின் உருவம் மற்றும் சிலுவை போன்ற சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலின் இடப்பக்கம் நான்கு அடுக்கு மணிக் கோபுரம் உள்ளது. தேவாலயத்தின் உட்பகுதியில் தூண்களும் வளைவுகளும் மிக்க நீளமான பிரார்த்தனை மண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தின் மறுமுனையில் உள்ள மேடையின் மேல் அரைக் குவிமாட வடிவமைப்பு காணப்படுகிறது.
சுருக்கம்
’அவர் லேடி ஆஃப் செவன் டொலோர்ஸ்’ (OUR LADY OF SEVEN DOLOURS CHURCH) எனப்படும் இந்தத் தேவாலயம், தன் மகனான இயேசுவின் மரணத்துக்கு வருந்தும் தாய் மேரிக்காக உருவாக்கப்பட்ட திருச்சபை ஆகும். ’டொலோர்ஸ்’ என்பது மேரி மாதாவின் 7 துயரங்களைக் குறிப்பதாகும்.
கூடுதல் விவரங்கள்
தேவாலயத்தின் வெளிப்பகுதி மற்றும் உட்பகுதியில் கடவுள்களும் புனிதர்களும் ஓவியங்களாகவும், வண்ணமயமான கண்ணாடி அலங்காரங்களாகவும், சிற்பங்கள் ஆகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். தேவாலயத்தின் மேடை மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு மேடையின் நடுப்பகுதியில் இயேசுவின் இறந்த உடலைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் மேரி மாதாவின் சிலை காணப்படுகிறது.
தகவல்

க.த.காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்