Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மீன்பிடித் திருவிழா

Fishing Festival

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

சமூக ஒற்றுமை, வேளாண்மை வளர்ச்சி, கிராமியப் பண்பு பெருகுதல்


நடைபெறும் இடம்

பெரிய கண்மாய்


நடைபெறும் தருணங்கள்

வைகாசி, ஆனி மாதங்களில் (தண்ணீர் வற்றுவதற்கேற்ப)


ஊர்

முதலைக்குளம்

மாவட்டம்

மதுரை

பாலினம்
பொது
விழாவின் வரலாறு / கதை
முதலைக்குளத்தில் கருப்பை வழிபட்டு வரும் குடிகள், மீன்குஞ்சுகளை வாங்கிப் பெரிய கண்மாயில் விடுகின்றனர். அவை வளர்ந்து பெருகுவதை ஊருக்கு வளமையாகக் கருதுகின்றனர். அவ்வாறு வழிபட்டு வரும் குடிகள் வேளாண்மை முடிந்த பிறகு வற்றிய குளத்தில் மீன் பிடித்து அவற்றைத் தமது வம்சாவளிகளுக்குக் கொடுக்கின்றனர். இது தங்களின் உரிமை என்றும், அதை உண்பது இறைவனின் படையலைப் பகிர்ந்து கொள்வதற்குச் சமம் என்றும் நம்புகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் வைகாசி, ஆனி மாதங்களில் ஊர் கூடி முடிவு செய்து, சுற்றியுள்ள ஊர்களுக்கு தமுக்குச் சாட்டியும் சுவரொட்டிகள் ஒட்டியும் மீன் பிடித் திருவிழாவை அறிவிக்கின்றனர். திருவிழாவிற்கு முதல் நாள், மேடையில் நாடகம் நிகழ்த்தப்படுவது வழக்கம். இரவு விடிய விடியக் கிராமியத் தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. தமிழகம் முழுவதுமிருந்து மக்கள் லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து இரவே குழுமுகின்றனர். அதிகாலை ஐந்து மணிக்கு முதல் வாணவேட்டு வெடிக்கப்படுகிறது. விடிவதற்குள் அடுத்தடுத்த இரண்டு வாணவேட்டு வெடிக்கப்பட்ட பின்பு கரையில் இருக்கும் மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களைப் பிடித்துச் செல்கின்றனர். சம்மந்தப்பட்ட உறவுகளுக்கு மீன்கள் வழங்கப்படுகின்றன.
விழாவின் தொன்மை
கண்மாயின் மடைக்கல்லில் வட்டடெழுத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. ”தென்கல்லக நாடு” என்று தொடங்கும் அந்தக் கல்வெட்டின் அடுத்த வரிகள் சிதைந்து விட்டன. இது பாண்டிய மன்னர் காலத்தில் வெட்டப்பட்டதாக இருக்கலாம். எனவே. குறைந்தது 500 ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் இம்மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருவதாகக் கருதுவதற்கு இடமுண்டு.
விரத முறைகள்
முதலைக்குளம் கருப்புக்குத் தேங்காய் பழம் வைத்து அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டபின், மீன் பிடித் திருவிழாவைத் தொடங்குகின்றனர்.
பலியிடல்
கண்மாய்க் கரையில் உள்ள கருப்புக்கு ஆடும் சேவலும் பலியிடப்படுகின்றன
நேர்த்திக்கடன்
பெரிய கண்மாய்க்கு மீன் குஞ்சுகள் வாங்கி விடுதல்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்
மீன்பிடித் திருவிழாவுக்கு முதல் நாள் வள்ளித் திருமணம் நாடகம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்
நாடகம், மீன்பிடித் திருவிழா
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ராகுல், முதலைக்குளம்

ராகுல், முதலைக்குளம்

ராகுல், முதலைக்குளம்

ராகுல், முதலைக்குளம்

ராகுல், முதலைக்குளம்

ராகுல், முதலைக்குளம்

ராகுல், முதலைக்குளம்