Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

தமிழி / தமிழ் - பிராமிக் கல்வெட்டு

Tamili /Tamil - Brahmi Inscription

அமைவிடம்

மலைப்பாறை, முதலைக்குளத்திருந்து விக்கிரமங்கலம் செல்லும் வழியில்.


மொழியும் எழுத்தும்

தமிழி/தமிழ் பிராமி


காலம் / அரசன்

சங்க காலம் மற்றும் பாண்டியர்க் காலம்


ஊர்

நடுமுதலைக்குளம்

மாவட்டம்

மதுரை

வரலாற்று ஆண்டு
பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாணடு மற்றும் பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
முதலைக்குளம் ஊரின் கிழக்கே உள்ள மலைப்பகுதியில் ஆறு பிராமி கல்வெட்டுகள், பொது ஆண்டு 1923 முதல் 1978 வரையிலான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. மலையில் உள்ள குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் முதல் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதில் “எம்ஊர் சிழிவன் அதன்தியன்“ என எழுதப்பட்டுள்ளது. ”எங்களூரைச் சேர்ந்த சிழிவன் அதன் தியன் என்பவரால் இந்தக் கொடை நல்கப்பட்டுள்ளது” என்பது இதன் பொருளாகும். மலையின் கீழே 2 கி.மீ. அளவிற்கு பரவிக் காணப்படும் கண்மாயைத்தான் இக்கல்வெட்டு குறிக்கிறது என அறிஞர்கள் சிலர் பொருள் கூறியுள்ளனர். அறிஞர்களுக்கிடையே பாடபேதங்களும் காணப்படுகின்றன.

இரண்டாம் பிராமிக் கல்வெட்டு பெரிய குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கைகளின் தலைப்பகுதியில் உள்ளது. “அந்தைய் பிகன் மகன் வெந்அதன்” என்று வெட்டப்பட்டுள்ளது. அந்தை பிகன் மகன் வெந்அதன் நல்கிய கொடை என்று அறிஞர்கள் சிலர் பொருள் கொள்கின்றனர்.

மூன்றாம் கல்வெட்டு ஒரு சிறு தனிப்பாறையின் கீழாக அமைந்துள்ள மிகச்சிறிய குகைத் தளத்தின் விதானத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ”எஇய்ல் அர்இய்தன் சேவித்ஒன்” என்று வெட்டப்பட்டுள்ளது. எஇய்ல் என்ற ஊரைச் சேர்ந்த அர் இய்தன் என்பவரால் செய்விக்கப்பட்டது என்பது இதன் பொருள்.

நான்காம் கல்வெட்டு மற்றொரு கற்படுக்கையின் தலைப்பகுதியில், ”பேதலை குவிரன்” என்று வெட்டப்பட்டுள்ளது. பே[த்]தலை என்ற ஊரைச் சேர்ந்த குவிரன் என்பவரால் இந்தப் படுக்கை செதுக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள்.

ஐந்தாவது கல்வெட்டு மற்றொரு கற்படுக்கையில் வெட்டப்பட்டுள்ளது. அதில் ”செங்குவிரன்” என்ற சொல் உள்ளது. செங்குவிரன் என்பவரால் இப்படுக்கை செதுக்குவிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள்.

ஆறாம் கல்வெட்டு மற்றொரு கற்படுக்கையில் வெட்டப்பட்டுள்ளது. அதில் ”கு[வி] ரதன்” என்ற சொல் உள்ளது. கு[வி]ரதன் என்பவரால் இப்படுக்கை செய்தளிக்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். இவை ஆறும் பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளாகும்.

இதைத் தவிர ஏழாவதாகக் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டானது, மலைக்குக் கீழ் உள்ள முதலைக்குளம் கண்மாயில், ஆய்வாளர் காந்திராஜன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்கு வரிகள் கொண்ட இந்தக் குமிழித்தூண் கல்வெட்டு, பொது ஆண்டு 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டாகும். முதல் சொல் ’ஸ்வஸ்தி ஸ்ரீ’ என்றும், அடுத்து “தென் கல்லக நாடு....” என்றும் கல்வெட்டு தொடங்குகிறது. பிற சொற்கள் தற்போது சிதைந்த நிலையில் உள்ளன. இக்குன்றுக்கு அருகில் உள்ள விக்கிரமங்கலம் குன்றிலும் பொது ஆண்டுக்கு முன் 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. மேலும் இக்குன்றின் சுற்றுவட்டாரப் பகுதியில் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால எச்சங்கள் மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த ஊர் இரண்டாயிரமாண்டுகளாகத் தொடர்ச்சியாக மக்கள் வாழ்விடப்பகுதியாகச் சிறப்புற்று விளங்கியிருப்பதை அறிய முடிகிறது.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
(ஸ்ரீதர் - தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள், ப. 34-37)
புகைப்படங்கள்

ந.இரத்தினகுமார்

ந.இரத்தினகுமார்

ந.இரத்தினகுமார்

ந.இரத்தினகுமார்