Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நடுகல்

Hero Stone

அமைவிடம்

செக்கானூரணியிலிருந்து கண்ணனூர் முடிவில் வலப்புறம் இந்த நடுகல் உள்ளது.


அளவு

6.5 அடி உயரம், 2.8 அடி அகலம்


வழிபாடு

ஆம்


ஊர்

கண்ணனூர்

மாவட்டம்

மதுரை

கதை
உத்தாத்தேவன் என்பவர் வடக்கம்பட்டி கிராமத்தில் வாழ்ந்து, கருமாத்தூர் 18 பட்டி கிராமத்தில் வரிவசூலிக்கும் பெரியவராக இருந்துள்ளார். உத்தாதேவனுக்கு இரண்டு பேரன்கள் - பெரியகழுவன், சின்னகழுவன் - இருந்தனர். பெரியகழுவன் கொக்குளத்தில் திருமணம் செய்து உள்ளான். கண்ணனூரில் நடைபெறவிருந்த திருவிழாவுக்குத் தன் மாமன்களை அழைக்கத் தன் மைத்துனன் மற்றும் வளர்ப்பு நாயோடு கொக்குளம் செல்லும் வழியில் முஸ்ராம் (முஸ்லீம்) படைகளால் தாக்கப்பட்டு மூவரும் இறந்தனர். மூன்று நட்கள் கழித்து முஸ்ராம் படைகள் கண்ணனூரைத் தாக்கின. இப்போரில் சின்னகழுவனும் இறந்தான். இவர்களது பாட்டியின் கனவில் ‘கழுவன் தெய்வம்’ தோன்றி, “தங்கள் இரு பேரன்களும் என்னை அடைந்துவிட்டனர். இனி என்னை வணங்குவதுபோல் இவ்விருவரையும் வணங்கிவர வேண்டும்” என்று கூறி மறைந்ததாக இப்பகுதி மக்களிடையே செவிவழிச் செய்தி உள்ளது.
காலம் / அரசன்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இது இரண்டுக்குழுக்களிடையே நடந்த சண்டையில் இறந்து பட்ட சகோதரர்கள் குறித்த நடுகல்லாக இருக்கலாம் என்று இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இரண்டு உருவங்கள் செதுக்கப்பட்ட இந்நடுகல்லின் வலப்புறம் உள்ளவர் உயரமாக உள்ளார். இருவரும் இடக்கையில் வளரியைப் பிடித்துக்கொண்டு, அணிகலன்கள் அணிந்தும் கொண்டை கட்டியும் உள்ளனர். உயரமாக உள்ளவர் கட்டாரி போன்ற ஒன்றையும், மற்றவர் குறுவாளையும் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கின்றனர். இடுப்பில் குறுவாள் வைத்துள்ளனர். கீழே இரண்டு வேட்டை நாய்கள் இருக்கின்றன. கண்ணனூர் மக்கள் பாட்டையா என்ற பெயரில் இந்த நடுகல்லை வழிபட்டு வருகின்றனர்.

தீபம், மாலை, பொங்கல், மொட்டை எனப் பல்வேறு முறைகளில் வழிபாடுகள் நடக்கின்றன. வெளியூரிலிருந்தும் குடிகள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். தை மூன்றாம் நாள் ஊருக்குள் இருக்கும் கோடாங்கியை வெறியாட்டம் ஆடவைத்து இந்த ஆட்டத்துடன் பட்டவன் தெய்வத்தை நோக்கி ஆடிச்செல்வார்கள். பின் பட்டவன் கோயிலில் நின்று கோடாங்கி அருள்வாக்கு கொடுக்கிறார். "என் பேரன், பேத்திகளை நான் கட்டிக்காக்கிறேனப்பா" என ஆசிர்வாதம் கொடுத்த பின் பெண்கள் பொங்கல் வைத்து, நடுகல்லுக்கு (கொசவம்) வெள்ளாடை, வெற்றிலை, சாம்பிராணி போன்ற பொருட்களை வைத்துப் பூசை செய்து வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ராஜவேலு