Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

உலகளந்த பெருமாள் சிற்பம்

Ulagalantha Perumal/Trivikrama Sculpture

அமைவிடம்

சிற்பம் திருக்கோவில் கல்யாண மண்டபத்தில் வலப்பக்கத்தில் அமைந்துள்ளது.


அளவு

7 அடி உயரம், 4 அடி அகலம்


கதை

வாமன அவதாரம் என்பது மகாவிஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். மலை நாட்டை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்தத் திட்டமிட்டான். மகாபலியின் ஆணவத்தை அடக்கக் குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்துத் திருமால் யாகச் சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி நிலம் தானமாகத் தரும்படி கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மகாபலி தர ஒப்புக்கொண்டான். பகவான் திரிவிக்கிரமர் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளந்தபின், மூன்றாமடியை எங்கு வைப்பது என்று கேட்டார். வந்திருப்பவர் மகாவிஷ்ணுதான் என்று உணர்ந்த மகாபலி, தனது தலையின்மேல் வைக்குமாறு கேட்டுக்கொண்டான். விஷ்ணு அவனுக்கு முக்தியளித்து அவனது அகந்தையை ஒழித்தார்.


ஊர்

அழகர் கோவில்

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டு, நாயக்கர் காலம்.
கூடுதல் விவரங்கள்
இங்கு மகாவிஷ்ணுவின் திரிவிக்கிரமர் / உலகளந்த பெருமாள் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் மகாவிஷ்ணுவின் 8 கைகளிலும் வாள், சங்கு, சக்கரம், வில், அம்பு, கேடயம், கர்தரீமுகம் (கத்திரிக்கோலின் அலகுகள் போல அமையும் கை முத்திரை) மற்றும் கஜஹஸ்தம் (யானையின் தும்பிக்கை போல அமையும் கை முத்திரை) ஆகியவை காணப்படுகின்றன. இச்சிற்பத்தின் 2 கைகள் உடைந்துள்ளன. விஷ்ணு தன் வலக்காலைத் தரையில் ஊன்றி, இடக்காலை வானத்தை நோக்கி உயர்த்தியுள்ளார். கிரீடமகுடம் மற்றும் மகரக்குண்டலம் உட்படப் பல அணிகலன்களை அணிந்துள்ளார். இச்சிற்பம் மிகவும் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

குறிப்புகள்
சிற்பச்செந்நூல் பக்கம் 44
புகைப்படங்கள்

தெ.துர்கா தேவி