Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

காளைநாத சுவாமி கோயில்

Kālainātha Swami Temple

கோயிலின் வேறு பெயர்

சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில், திருச்சுழியல் பள்ளிப்படைக் கோயில், காளநாத சுவாமி கோயில்.


பிற தெய்வத்தின் பெயர்கள்

சொர்ணவல்லித் தாயார்


அமைவிடம்

திருச்சுழியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.


ஊர்

பள்ளிமடம்

மாவட்டம்

விருதுநகர்

தலத்தின் சிறப்பு
இது பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டில், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தனது அண்ணன் சுந்தரபாண்டியனுக்காக எழுப்பிய பள்ளிப்படை கோயிலாகும்.
மூலவர் பெயர்
காளைநாதர்/ காளநாத சுவாமி
கோயில் குளம்/ஆறு
குண்டாறு
பூசைக்காலம்
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஆனி மாதம் ஆருத்திரா தரிசனத்தின்போது நடராஜருக்குச் சந்தனக் காப்புச் செலுத்தப்படுகிறது. மூலவரான சிவலிங்கத்திற்கு ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் தேங்காய், பூ, பழம், பொங்கல், தயிர்ச் சோறு, புளியோதரை போன்றவை வழிபாட்டின்போது படைக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 10ஆம் நூற்றாண்டு, சோழன் தலை கொண்ட வீரபாண்டியன்.
கல்வெட்டு / செப்பேடு
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் சடையன் (பராந்தக நெடுஞ்சடையன்) என்ற மன்னனின் வட்டெழுத்துக் கல்வெட்டும், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயில் இறைவன் ’சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார்’ என்று குறிப்பிடப்படுகிறார்.

இங்குள்ள கல்வெட்டுகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட பல்வகைக் கொடைகள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. இக்கோயிலைச் சார்ந்து மகாவிரதிகளின் சைவமடம் ஒன்று இருந்துள்ளது. பள்ளிமடம் சிவன் கோயிலின் முன்மண்டபத்திலுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் வெண்புநாட்டுக் குறண்டி என்ற ஊரில் இருந்த புகழ்பெற்ற சமணப்பள்ளிக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றித் தெரிவிக்கின்றன. காரியாபட்டி வட்டத்தில் ஆவியூருக்கு அருகிலுள்ள குறண்டி என்ற ஊரில் இருந்த இச்சமணப்பள்ளி அழிந்துபட்ட நிலையில் அங்கிருந்த சமணப்பள்ளியின் கல்வெட்டு பொறித்த கட்டடக் கற்கள் பள்ளிமடத்திற்குக் கொண்டு வரப்பட்டு பள்ளிமடம் சிவன்கோயில் முன்மண்டபம் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் கி.பி. 8-10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும்.
சிற்பங்கள்
நடராஜர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சிவகாமி அம்மன், பிள்ளையார், முருகன் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
பாண்டிய மன்னன் ராஜசிம்ம பாண்டியன், முதலாம் பராந்தகச் சோழனிடம் நாட்டை இழந்ததால், இலங்கை சென்று இலங்கை மன்னனிடம் தனது மணி முடியையும் அரச சின்னங்களையும் பத்திரப்படுத்திய பின்னர் தாய் வானவன்மாதேவியின் நாடான சேர நாட்டுக்குச் சென்று விட்டார். அதன் பின்னர் ராஜசிம்ம பாண்டியனின் மைந்தர்களான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் பாண்டிய நாட்டைச் சோழர்களிடமிருந்து மீட்கப் போராடினர். போராட்டத்தில் சோழர்களுடன் ஏற்பட்ட போரில் சுந்தரபாண்டியன் இறந்துவிட்டார். அதன் காரணமாக சுந்தரபாண்டியன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது சகோதரரான வீரபாண்டியன் ஒரு பள்ளிப்படையை எழுப்பியுள்ளார். பள்ளிப்படை என்பது இறந்தவரின் நினைவாக அமைக்கப்படும் கோயிலாகும். அப்பள்ளிப்படைக் கோயில் “சுந்தரபாண்டிய ஈசுவரமுடையார்” கோயில் என அழைக்கப்பட்டது. இக்கோயில் இறைவன் இன்று *காளநாத சுவாமி” என்றழைக்கப்படுகின்றார். இதற்கான சான்றுகள் இக்கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

மேலும் இவ்வூருக்குப் பள்ளிமடம் எனப் பெயர்வரக் காரணம் இவ்விடத்தில் பள்ளிப்படை இருந்ததால் அல்ல. இவ்விடத்தின் அருகில் திருக்காட்டாம்பள்ளியில் சமணக் குரவர்கள் தங்கியிருந்ததை அடிப்படையாகக் கொண்டு பள்ளிமடம் எனப் பெயர் வந்திருக்க வாய்ப்புண்டு. இதற்குச் சான்றாக இக்கோயிலில் திருக்காட்டாம்பள்ளிக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் பற்றிய கல்வெட்டுகளும் உள்ளன.
கோயில் அமைப்பு
நாற்கர/நாகர விமானம், கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடம், சொர்ணவல்லித் தாயார் சந்நிதி ஆகிய கட்டுமானங்கள் காணப்படுகின்றன.
சுருக்கம்
இது ’சோழன் தலை கொண்ட’ வீரபாண்டியன் தன் இறந்த அண்ணன் சுந்தர பாண்டியனுக்காக எழுப்பிய பள்ளிப்படைக் கோயிலாகும். இந்தச் சிவன் கோயிலுக்குக் கல்வெட்டுகளில் “சுந்தரபாண்டிய ஈசுவரமுடையார்” மற்றும் “பள்ளிப்படை சுந்தரபாண்டீசுவரத்துப் படாரர்” போன்ற பெயர்கள் சொல்லப்பட்டாலும், தற்போது இது காளைநாத/காளநாத சுவாமி கோயில் என்றே அறியப்படுகிறது. இக்கோயிலில் விமானத்துடன் கூடிய கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், நந்தி மண்டபம் ஆகியன உள்ளன. கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் சதுரவடிவில் உள்ளது. இங்குத் சொர்ணவல்லித் தாயாருக்குத் தனி சந்நிதி உள்ளது. பிள்ளையார் சிலை, கருவறைக்கு வெளியில் பீடத்தில் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளும், வெளியே தனியாக நந்தி மண்டபத்திலும் நந்தி சிலை காணப்படுகிறது. இவ்வளாகத்தில் உடைந்த சிற்பங்கள் காணப்படுகின்றன.

திருச்சுழியின் அருகே பள்ளிமடத்தில் எழுப்பப்பட்ட இந்த பள்ளிப்படைக் கற்றளியில் குறண்டி சமண பள்ளியின் கட்டுமான கற்களைப் பயன்படுத்தி கட்டி உள்ளனர் என்பதற்கு ஆதாரமாக மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர்_மாவட்டக்_கல்வெட்டுகள்_தொகுதி_1 (முன்னுரை & பக்கம் 80-93) மற்றும் விருதுநகர் மாவட்ட வரலாறு (பக்கம் 90,91). பள்ளிப்படை-
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருமேனிநாதர் சிவன் கோயில் திருச்சுழி
செல்லும் வழி
திருச்சுழியில் இருந்து நரிக்குடி செல்லும் சாலையில் குண்டாற்றின் கிழக்குப் பகுதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருச்சுழி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருச்சுழி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.