Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மருதகாளியம்மன் கோயில்

Maruthakali Amman Temple

அமைவிடம்

குள்ளப்புரம் ஊருக்கு கிழக்கு பக்கம், சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில், வைகை ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

காளியம்மன்


தல மரம்

சாலி மரம்


ஊர்

குள்ளப்புரம்

மாவட்டம்

தேனி

கோயில் குளம்/ஆறு
வைகை நதி
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
கார்த்திகை மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இக்கோயிலில் திருவிழாவின் போது ஒரு எருமை கிடாய் பலியிடப்படுகிறது. தேனி மாவட்டத்தில் எருமை கிடாய் பலியிடப்படும் சிறு தெய்வ கோயில் இது ஒன்றுதான் என சொல்லப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 600 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
கோயிலின் இடப்பக்கம் இரண்டு அண்மைக்கால காளி தெய்வ சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இரண்டும் சிற்பம் அமைப்பில் வேறுபட்டுள்ளன. இவற்றுள் வலப்பக்கம் உள்ள சிலையில் சுடர் போன்ற தலையலங்காரம் காணப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இக்கோயில் உருவானதற்கு செவிவழிச் செய்தியாக ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில், ஒரு பெட்டிக்குள் ஒரு தெய்வத்தைச் சிறு குழந்தையாக அடைத்து வைத்து, மதுரையில் வைகை நதியில் விட்டார்களாம். அந்த பெட்டி வைகை நதியில் பயணித்து கடைசியில், தற்போது கோயில் உள்ள இடத்தில் கரை ஒதுங்கியது. இதைக் கண்ட ஊர் மக்கள் இருவர் பெட்டியை எடுத்து சென்று ஊருக்குள் வைத்துள்ளனர். இரவு பெட்டியில் இருந்து அழுகை சத்தம் வருவதைக் கண்ட அவர்கள், பெட்டியை எடுத்த இடத்திலேயே வைக்க முடிவுசெய்தனர். அவ்வாறே பெட்டியை வைக்கும்போது, பெட்டியுள் இருப்பதை பார்க்க ஆவல்பட்டு பெட்டியை திறக்கும் பொழுது மருதகாளியம்மன் தெய்வமாக காட்சி அளித்து அதே இடத்தில் தெய்வமாக குடிகொண்டாராம்.

பின்னர் ஒரு சமயம், வளையல் வியாபாரி ஒருவர் காளியம்மனிடம், ’வியாபாரம் நன்றாக நடந்தால் நான் வியாபாரம் செய்யும் வளையலை காணிக்கையாக தருவேன்’ என வேண்டியுள்ளார். தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற, மருதகாளிக்கு கையில் வளையல் போடும் பொழுது தவறான எண்ணத்துடன் மருதகாளி கையைப் பிடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அம்மன் வளையல் வியாபாரியை பலிகொண்டுள்ளாள் என்ற கதையும் சொல்லப்படுகிறது. கண்ணகி மதுரையை எரித்தபிறகு வைகை ஆற்றங்கரை வழியாகச் செல்லும்போது இம்மருதகாளியம்மன் கோயிலில் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டுச் சென்றுள்ளார் என்ற தொன்மக்கதையும் இப்பகுதி மக்களிடம் உள்ளது.
கோயில் அமைப்பு
குவிமாட அமைப்பில் விமானம், கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் அதற்கு முன் சிறு மண்டபமும் உள்ளது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
குன்னுவராயன் கோட்டை பிற்கால பாண்டியர் கோயில், குள்ளபுரம் சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள், புலிமான்கோம்பை தாதபட்டி தமிழ் கல்வெட்டுகள், மற்றும் மூனாண்டிபட்டி பாறை ஓவியம்.
செல்லும் வழி
ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளத்தில் இருந்து குள்ளப்புரம் செல்லலாம் பின்னர் அங்கிருந்து கிழக்கு பக்கமாக ஐந்து கிலோ மீட்டர் இருசக்கர வாகனங்களில் பயணிக்கலாம் அல்லது கால்நடையாகவே செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டிபட்டி பெரியகுளம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
ஆண்டிபட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
ஆண்டிபட்டி பெரியகுளம்
புகைப்படங்கள்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்

ப.பிரதீப்