Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

கள்ள முத்தையா கோயில்

Kalla Muthiah Temple

கோயிலின் வேறு பெயர்

அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

பட்டாளம்மன் மற்றும் முத்தையா


அமைவிடம்

மேல்மங்கலம் ஆத்தங்கரை பகுதியில் உள்ளது.


ஊர்

மேல்மங்கலம்

மாவட்டம்

தேனி

தலத்தின் சிறப்பு
ஒரே கோயிலுக்குள் முத்தையாவுக்கும் பட்டாளம்மனுக்கும் சன்னதிகல் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வடுகபட்டி மற்றும் மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இணைந்து புரவி ( குதிரை) எடுக்கும் திருவிழாவை சிறப்பாக நடத்துகின்றனர்.
மூலவர் பெயர்
மூலவர் ஆவுடையம்மாள் அல்லது பட்டாளம்மாள்
கோயில் குளம்/ஆறு
வராக நதி
பூசைக்காலம்
இரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
திருவிழா அக்டோபர் மாதம் 7, 8 & 9 ஆம் தேதிகளில் நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் புரவி எடுப்பு என்பது சிறப்பான நகழ்வாகும். மண்ணால் செய்த குதிரைகளை வண்ணம் தீட்டி, மின்விளக்குகளால் அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு செய்யும் முறைக்கு புரவி எடுப்பு என்று பெயர். இவ்வகை வழிபாடு பெரும்பாலும் தென்தமிழகப் பகுதிகளில் காணப்படுகிறது. ஐயனாரின் வாகனமாக விளங்கும் குதிரைகளுக்குச் செய்யும் மரியாதையாக இவ்விழா கருதப்படுகிறது. முத்தையா தெய்வத்தை, இவ்வூர் மக்கள் ஐயனாரின் வடிவமாகவும் நாராயணன் மற்றும் ஈஸ்வரனின் அம்சமாகவும் கருதி வழிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. திருவிழாவை ஒட்டி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. திருவிழா முடிந்த பின்பு இத்தெய்வத்திற்கு கோழி, ஆடு, போன்ற உயிரினங்கள் நேர்த்திக்கடனாக பலியிடப்படுகின்றன.



ஊர் மக்கள் கள்ளமுத்தையா தெய்வத்திடம் தங்கள் குழந்தைகள் நலனுக்காகவும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் நலனுக்காகவும், நோய் நொடி மற்றும் தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காகவும் வேண்டிக்கொள்கின்றனர். அவ்வாறு கடவுள் குழந்தைகளையும் கால்நடைகளையும் பாதுகாத்தல் கால், பாதம், கைகள், சிறு குழந்தைகள் உருவங்களை, குதிரை மற்றும் நாய் வாகன உருவங்களை, மற்றும் பிற பம்பை உருவங்களை நேர்த்திகடனாக படைப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் புரவி எடுப்புத் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும், நிர்ணயம் செய்தபடி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் குதிரைகளை அலங்கரித்து எடுத்துச் செல்வர்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நேர்த்திக்கடனாக அக்னி சட்டி எடுப்பது, விலங்குகள் பலி கொடுப்பது, சுதை சிற்ப வடிவில் குதிரைகள் எடுத்து வைப்பது, கால் பாதங்கள் மற்றும் சிறு பொம்மை உருவங்கள் போன்றவை சுதை சிற்பங்களாக கோயிலில் வைப்பது ஆகிய வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
சிற்பங்கள்
பூதகனங்கள் சிற்பம், பட்டாளம்மாள் / ஆவுடையம்மாள் சிற்பம், கள்ள முத்தையாவின் சிற்பம், பேயன் பேச்சியம்மாள் என்ற நாட்டுப்புற தெய்வங்களின் சுதை சிற்பங்கள் மற்றும் ஸ்ரீ கரிய மாகனேஸ்வர சுவாமி சுதை சிற்பம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு முத்தையா என்ற தெய்வம் கேரளாவில் இருந்து வைகை ஆற்றில் மிதந்து பெட்டியில் வந்ததாக சொல்லப்படுகிறது. வைகை ஆற்றில் பெட்டில் வந்த முத்தையா தெய்வத்தை தூக்கி கிராம மக்கள் வடுகபட்டிக்கு கொண்டு செல்லும் பொழுது தூக்கி சென்றவருக்கு தண்ணீர் தாகம் எடுத்ததாம். அப்போது, இன்றுள்ள கள்ளமுத்தையா கோயில் அருகில் பெட்டியை இறக்கி வைத்து வராகி நதியில் தண்ணீர் குடித்துள்ளார். உடனே பெட்டி மாயமாக மறைந்து விட்டதாம். இதைப் பார்த்து பயந்த மக்கள் மேல்மங்கலத்தில் உள்ள ஒரு பிராமணரிடம் இந்நிகழ்வை சொல்ல, அப்பிராமணருடன் வந்து அங்கே தேடிப் பார்த்துள்ளனர். அப்போது ஒரு குரல், ’நான் தான் முத்தையா. எனக்கு இந்த இடமே போதுமானதாக இருப்பதால், நான் இங்கேயே தங்கி விடுகிறேன். எனக்கு இவ்விடத்தில் ஒரு சிறு கோயில் கட்டி வணங்கி வாருங்கள். நான் இவ்வூர் மக்களுக்கு காவல் தெய்வமாக இருப்பேன்’, என்று கூறியதாம். ஊர் மக்களும் அவ்வாறே கோயில் கட்டி, அவரை காவல் தெய்வமாக பாவித்து வணங்கி வருகின்றனர் என்ற கள்ள முத்தையா தெய்வம் பற்றிய கதை இப்பகுதி மக்களிடம் பல காலமாக சொல்லப்பட்டு வருகிறது.
கோயில் அமைப்பு
ஆவுடையம்மாள் என்ற பட்டாளம்மன் கருவறைக்கு மேல் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கிழக்குப் பக்கமாக கள்ள முத்தையாவுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டு இருக்கிறது. இக்கோயிலில் திருசுற்று மண்டபமும் காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் மூலவராக உள்ள பட்டாளம்மாள் மகிஷாசுர மர்த்தினியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. கள்ள முத்தையா தெய்வத்தை மக்கள் நாராயண ஈஸ்வரன் வடிவங்களாக கருதி வணங்கி வழிபட்டு வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. இக்கோயில் சன்னதியில் கள்ள முத்தையா தன் வலக்கையில் அரிவாளும் தன் இடக்கையில் கதை போன்ற ஆயுதத்தையும் பிடித்துள்ளது போல் சிற்பம் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு சிறிய பீடத்தின் மேல் யானையுடன் நின்றது போல் கரிய மாகனேஸ்வர சுவாமி சிற்பம் காணப்படுகிறது. வேறு ஒரு பீடத்தில் பேயன் பேச்சி ஆகியோரின் சிற்பங்களும், பேச்சி சிற்பத்தின் முன்பு ஒரு குழந்தை உருவம் இருப்பது போலும் சிற்பம் அமைந்துள்ளது.

கோயில் வளாகம் முழுவதிலும் நேர்த்திக்கடனாக கொடுக்கப்பட்ட குதிரை சிற்பங்கள், பாதம் போன்ற சிற்பங்கள் மற்றும் பிற சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலுக்குள் ஒரு பெரிய பூத கனத்தின் சிற்பமும் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மேல்மங்கலம் கிராமத்தில் பள்ளிகொண்ட பெருமாள் கோயில், நடுவில் நின்ற பெருமாள் கோயில், மாயா பாண்டீஸ்வரர் போன்ற கோயில்கள் உள்ளன.
செல்லும் வழி
மேல்மங்கலம் கிராமத்தில் இருந்து இக்கோவிலுக்கு தனி சாலை செல்கிறது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகுளம் மற்றும் மேல்மங்கலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி ஆண்டிபட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
பெரியகுளம்
புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

காணொலி

ம.ரேவன்

ம.ரேவன்