Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஆதிசிவன் கோயில்

Ādhisivan temple

கோயிலின் வேறு பெயர்

வேட்டுவமங்கலம்


அமைவிடம்

ஊரின் தெற்கே அமைந்துள்ளது


தலத்தின் சிறப்பு

இக்கோயில் கருவறையில் சிவன் உட்கார்ந்த நிலையில் உள்ளார். மேலும், இக்கோயிலில் பெண் பூசாரிகள் உள்ளனர்.


ஊர்

நாட்டார் மங்கலம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
ஆதி சிவன்
தல மரம்
வில்வமரம் 
கோயில் குளம்/ஆறு
குளம்
பூசைக்காலம்
கருவறை பூட்டப்பட்டே இருக்கும். சில நாட்கள் மட்டும் திறக்கப்படும்.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை முதல் நாள், தலை ஆடி, கடைசி ஆடி, மார்கழி முதல் நாள், தை முதல் நாள், மகா சிவராத்திரி மற்றும் மாசியில் ஒரு நாள் இக்கோயில் திறக்கப்படுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கோயிலில் நெய் தீபம் மட்டும் ஏற்றப்படுகிறது. ஆதிசிவன் என்று அழைக்கப்படும் இந்த தெய்வம் ஏழு ஊர்களுக்கு கட்டுப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோயில் திறக்கப்படும் பொழுது கோயிலின் தலைமை பூசாரி, கோடாங்கிகள் மற்றும் ஏழு ஊர் பொது மக்களையும் அழைக்கிறார். அவ்வாறு கோயில் திறக்கப்படும் போது தலைமை பூசாரியின் மனைவி வெள்ளை சேலை அணிந்து கோயிலின் மூலஸ்தானத்தில் பொங்கல் பொங்க வைக்கிறார். தலைமை பூசாரி அந்த பொங்கலை படைக்கிறார்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில் உண்டாத் தேவர், உலகாத் தேவர் என்ற இரு சகோதரர்கள் நாட்டார்மங்கலம் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அதே பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்த சில வேடர்கள், அவர்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். உலகாத் தேவரின் மனைவி கருவுற்று, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். ஒரு நாள், குளத்திலிருந்து நீர் எடுத்து வந்த அவர் வயிற்றில், வேடர்களின் அம்பு பாய்ந்தது. வலியில் துடித்த உலகாத் தேவர் மனைவியின் குரலுக்காகக் கருணை உள்ளத்தோடு இரங்கி வந்து காட்சி தந்தார் ஆதிசிவன். உண்டாத் தேவர், உலகாத் தேவரின் வாரிசுகளைக் காப்பதாக வாக்களித்த ஆதிசிவன், அங்கேயே தவக்கோலத்தில் அமர்ந்தார் என்ற செவிவழிச் செய்தி பலகாலமாகக் கூறப்படுகிறது. இவர்களது வாரிசுகள் இன்னமும் பெரியவாகைக்குளம், சின்னவாகைக்குளம், பெருங்காமநல்லூர், நட்டமங்கலம், அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி, நாகலாபுரம் ஆகிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஆதிசிவனைத் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
கோயில் அமைப்பு
பெரிய கோபுரம், அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறை, சிறிய விமானம் மற்றும் தெப்பக்குளம் போன்ற அமைப்புகளுடன் இக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானைத் தவிர மாயாண்டி சாமி, வீரபத்திர சாமி, பெரிய கருப்ப சாமி, சின்ன கருப்ப சாமி, பேச்சியம்மன் மற்றும் ராக்காச்சியம்மன் போன்ற தெய்வங்களும் இங்கே வழிப்படப் படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
கருவறையில் உள்ள தெய்வம், சிவபெருமானாகும். பொதுவாகச் சிவாலயங்களில் சிவன் லிங்கமாகக் காட்சியளிப்பார். ஆனால் இங்கு அவர் லிங்க வடிவில் இல்லாமல், சிலை வடிவில் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் உள்ள பரிவாரத் தெய்வங்களுக்குப் பெண் பூசாரிகள் பூசை செய்கின்றனர். முதன்மைத் தெய்வத்திற்கு ஆண் பூசாரி பூசை செய்கின்றார். இக்கோயிலில் மகா சிவராத்திரி மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டில் ஆறு முறை பூசை நடத்தப்படுகிறது. தை மாசி சித்திரை ஆடி மார்கழி ஆகிய மாதங்களில் சிறப்புப் பூசை நடத்தப்படுகிறது.

சங்க காலத்தில் மகளிர் பூசாரிகளாகச் செயல்பட்டதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. இன்றும் தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வங்கள் பலவற்றிற்குப் பெண்களே பூசாரிகளாகச் செயல்படுகின்றனர். நாட்டார் மங்கலத்தின் பரிவாரத் தெய்வங்களாக ஆண்டிச் சாமி, மாயாண்டிச் சாமி, வீரபுத்திர சாமி, பெரிய கருப்ப சாமி, பேச்சியம்மன், சின்ன கருப்பசாமி, ராக்காயி அம்மன் ஆகிய ஏழு தெய்வங்கள் உள்ளன. இவற்றில் பேச்சியம்மனுக்கும் ராக்காயி அம்மனுக்கும் பெண் பூசாரிகள் இருப்பது தனித்துவமான அம்சமாகும். வாலாந்தூர் சீலைக்காரி கோயிலில் பெண் கோடாங்கிகள் சாமியாடி, அருள் இறங்கி, திருநீறு கொடுப்பர்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

செல்லும் வழி
செல்லம்பட்டியிலிருந்து உசிலம்பட்டி போகும் வழியில் இடப்புறம் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செல்லம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
உசிலம்பட்டி
புகைப்படங்கள்

விஜயகுமார், பக்தவத்சல பாரதி

விஜயகுமார், பக்தவத்சல பாரதி

விஜயகுமார், பக்தவத்சல பாரதி

விஜயகுமார், பக்தவத்சல பாரதி