Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

நாகேஸ்வரர் திருகோயில்

Nageswarar Temple

கோயிலின் வேறு பெயர்

நாகம்மன் கோயில்


பிற தெய்வத்தின் பெயர்கள்

நாகேஸ்வரர்


அமைவிடம்

மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் கொடிமங்கலத்தின் அருகில் நாகமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.


ஊர்

கொடிமங்கலம்

மாவட்டம்

மதுரை

தலத்தின் சிறப்பு
நாகமலையில் இயற்கையாக உருவான தீர்த்தம் நாகத் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இங்கு நீர் வழிந்தோடும். இம்மலை நாக வடிவில் இருப்பதாலும் நாகத் தேவதைகள் வாழ்ந்த இடமாகக் கருதப்படுவதாலும் இது நாகமலை எனப்படுகிறது. எனவே இந்த நாகேஸ்வரர் கோயில் கேது நாகதோஷப் பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது.
மூலவர் பெயர்
நாகம்மன், நாகேஸ்வரர்
பூசைக்காலம்
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை வழிபாடு நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
ஆடி அமாவாசை, மாசி சிவராத்திரி, திருக்கார்த்திகை, சங்கராந்தி ஆகியன முக்கியத் திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இவ்விடம் ராகு - கேது தோஷம், நாகத் தோஷம் நீக்கும் பரிகாரத்தலமாக இப்பகுதி மக்களால் வணங்கப்பெற்று வருகிறது. இக்கோயிலில் பெளர்ணமி அன்று நாகம்மனுக்குப் பொங்கல் வைத்துப் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பெண்களுக்கு நாகத்தோஷம் நீங்கித் திருமணம், குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வேண்டுதல்களுடன் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
சிற்பங்கள்
இந்நாகத் தீர்த்தத்தில் நாகம்மன், சிவன், கிருஷ்ணன், ஆகாசக் கருப்பண்ணசாமி, நாகலிங்கம் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
கோயில் அமைப்பு
இக்கோயிலின் மூலஸ்தானம் என்பது மிகச் சிறிய கோட்டம் போல் அமைக்கப்பட்டு அதில் நாகம்மன் மற்றும் ராக்காயி அம்மன் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோட்டத்தின் கீழ் ஒரு நீர் வெளியேறும் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக நாகதீர்தத்தின் நீர் வெளியேறுவதாக சொல்லப்படுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள பிற தெய்வங்களுக்கு தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
கூடுதல் விவரங்கள்
நாகமலையில் உள்ள நாகத் தீர்த்தம் இயற்கையாக உருவான தீர்த்தம் ஆகும். இம்மலையில் நாகங்கள் நிறைய உள்ளதாகவும், நாகத்தீர்த்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களை அவை தீண்டுவதில்லை என்றும், இங்குள்ள தீர்த்த நீர் மூலிகைகளால் நிறைந்தது என்றும் நம்பப்படுகிறது. திருநாகேஸ்வரம், காளகஸ்திக்கு இணையானது இந்த நாகத்தீர்த்தத் தலம் என்றும் இங்குள்ள ஆலய சேவகர்களும் ஊர் மக்களும் தெரிவிக்கின்றனர்.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
சோழவந்தான் ஜனக மாரியம்மன் கோயில்
செல்லும் வழி
மதுரையிலிருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் கொடிமங்கலத்தின் அருகில் நாகமலையின் அடிவாரத்தில் நாக அம்மன் கோயில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடிமங்கலம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
தங்கும் வசதி
மதுரையில் தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன.
புகைப்படங்கள்

முனைவர் பா.ஆத்மநாதன்