Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

பெரிய நாச்சி அம்மன் கோயில்

Periya Naachi Amman Temple

கோயிலின் வேறு பெயர்

பேச்சியம்மன், அம்மச்சியார் அல்லது பெரிய நாச்சியம்மன்


மூலவர் பெயர்

பெரிய நாச்சியம்மன்


திருவிழாக்கள் விவரங்கள்

பெரிய நாச்சி அம்மன் கோயிலில் 2024 பிப்ரவரி 22 அன்று தமிழில் வேத மந்திரங்கள் முழங்கக் கோயிலின் முதல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


ஊர்

நல்லூர்

மாவட்டம்

மதுரை

காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
முன்னொரு காலத்தில் உறையூர்ப் பகுதியில் வீரியப் பெருமாள் எனும் ஒரு வணிகர் எண்ணெய் வணிகம் செய்து வந்தார். அவருடைய மனைவியே ஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார் ஆவார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அப்போது அந்த நாட்டை விசுவப்ப நாயக்கர் (17ஆம் நூற்றாண்டு தொடக்கம்) என்கிற மன்னன் ஆண்டு வந்திருந்தார். அந்த மன்னனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். ஆனால் அவள் இளம் வயதிலேயே இறந்து விட்டாள். அவள் மீது அதிகப் பாசம் கொண்டிருந்த மன்னனால் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ஆட்சியிலும் கவனம் செலுத்த முடியாமல் அங்கும் இங்கும் அலையத் தொடங்கினார். இப்படி அலைந்து கொண்டிருந்த அவர் ஒருநாள் எதிர்பாராதவிதமாக பெரிய நாச்சி அம்மையாரைக் கடை வீதியில் காண நேரிட்டது. பெரிய நாச்சி அம்மையார் உருவ அமைப்பில் மன்னனின் இறந்து போன மகளைப் போலவே இருந்ததைக் கண்டார். அம்மையாருடைய கணவரைச் சந்தித்து அவர்களைத் தமது அரண்மனையிலேயே வந்து தங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் மன்னர்.

ஆனால் அந்தத் தம்பதியினரோ அரண்மனையில் சென்று தங்க விருப்பம் இல்லை என்றும், மன்னன் இப்போது தனது மகளாகக் கருதும் பெரிய நாச்சி அம்மையாரை எப்போது காண விரும்பினாலும் உடனே அவர்கள் அரண்மனைக்கு வந்து அவரைச் சந்திப்பார் என்றும் கூறினர். மன்னனும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பினார். ஒருநாள் வீரியப் பெருமாள் தனது நாயுடன் செல்லும்போது கோட்டை முனி எனப்படும் பேய் ஓன்று அவரை அடித்துக் கொன்று விட்டதாம். வளர்ப்பு நாய், இறந்து கிடந்த அதன் எஜமானரின் உடலை எப்படியோ வாயால் கவ்வி வீட்டுக்கு இழுத்து வந்தது. உடனடியாகத் தனது கணவரின் உடலை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு உறையூருக்குக் கிளம்பிச் சென்றார் பெரிய நாச்சி. ஆனால் அந்த வண்டியோ தற்போது பெரியநாச்சி அம்மன் ஆலயம் உள்ள இடத்தருகே வந்ததும் அங்கிருந்து மேலும் நகராமல் நின்றது. ஒருவேளை தனது கணவர் தன்னை அங்கேயே தகனம் செய்து விடச்சொல்கிறாரோ என்று எண்ணிய அம்மையார் தகனத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து, அவர் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறினார். பின்னர் அவர் மன்னன் கனவில் தோன்றி, தான் அந்த ஊரைக் காத்தபடி இருக்க விரும்புவதாகவும், உடன்கட்டை ஏறிய இடத்திலேயே ஓர் ஆலயம் அமைத்துத் தன்னை வழிபட வேண்டும் என்றும் கூறினாள். இந்தக் கதையே பெரிய நாச்சியம்மன் வரலாறாக உள்ளூர் மக்களால் இன்றும் சொல்லப்பட்டு வருகின்றது.
கோயில் அமைப்பு
இந்தக் கோயிலில் கூரை வேயப்பட்ட நிலையில் 100 ஆண்டுகளாகச் சாமி வைக்கப்பட்டு, ஊர் மக்களால் வழிபாடு செய்துவரப்பட்டது. அண்மையில் தமிழக அரசின் உதவியுடன் ஊர்ப் பொதுமக்கள் கோயிலைப் புதுப்பித்துக் கட்டினர்.
சுருக்கம்
.
கூடுதல் விவரங்கள்
தமிழ்நாட்டில் பல நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இந்தப் பெரிய நாச்சியம்மன் ஆலயம் அமைந்த கதை, பல கிராமத் தெய்வங்களின் 'மனிதர்கள் தெய்வமான கதை'யை ஒத்து உள்ளது. இந்தக் கதை வாய்மொழி வழியே காலம் காலமாகக் கூறப்பட்டு வருகிறது. மதுரையில் வசிக்கும் குறிப்பிட்ட பிரிவினர் பெரிய நாச்சியம்மனைக் குலதெய்வமாக வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

செல்லும் வழி
திருப்பரங்குன்றம் வழியாகச் சென்றால் 26 நிமிடத்தில் நல்லூர் சென்றடையலாம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்