Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

மலையப்ப சாமி கோயில்

Malaiyappasami Temple

கோயிலின் வேறு பெயர்

மலையப்ப சாமி கோயில்


அமைவிடம்

கொடிக்குளம் மலையடிவாரம் உள்ள பொய்கைக்கு அருகே அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

விஷக்கடிக்கும், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடைவதற்கும் இந்த கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஊரில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் விஷக்கடிக்கு இங்கு வந்து வழிபடுவது வழக்கமாகும்.


ஊர்

ஒத்தகடை கொடிக்குளம்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
மலைப்பசாமி
கோயில் குளம்/ஆறு
கொடிக்குளம் பொய்கை.
திருவிழாக்கள் விவரங்கள்
பங்குனி மாதம் மலைச்சாமி கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவிழாவை எடுத்து நடத்துகின்றனர். மலையப்ப சுவாமி கோயில் திருவிழா என்பது சுற்றுவட்டாரங்களில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் திருவிழாவாகும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
விஷக்கடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக மலையப்ப சாமி கோயிலுக்கு வரும் மக்கள் பொய்கையில் இறங்காமல், கோயிலை அடைகின்றனர். ஏனெனில் இங்கு விஷம் குறித்து சொல்ல வருபவர்கள் பொய்கை நீரில் இறங்கக்கூடாது என்றும், கோயிலுக்கு காணிக்கையோ, நன்கொடையோ எதுவும் செலுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.

கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த மலைச்சாமி கோயிலுக்கு பெண்கள் வருவதற்கு அனுமதி கிடையாது. குழந்தை வரம், திருமண வரம் உள்ளிட்டவைகளை அருளும் தெய்வமாக இந்த மலைச்சாமி கருதப்படுகிறது. இக்கோயிலுக்கு நேர்த்திக்கடனாக மணி கட்டும் பழக்கம் பலகாலமாக இவ்வூர் மக்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சுவரோவியம்
கொடிக்குளம் மலைகளை சுற்றி கடவுள் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
கொடிக்குளம் கிராமத்தில் மலையே சாமியாக கருதப்படுகிறது. மலைச்சாமிக்கு என்று தனியாக சிலைகள் எதுவும் இல்லை.
தல வரலாறு / கதைகள்
பல தலைமுறைகளாக இந்த மலையப்ப சுவாமி வழிபடப்பட்டு வருகிறது. அது ஊரின் மிக முக்கிய தெய்வமாக விளங்குகிறது. இயற்கையை காக்கும் பொருட்டு மலையை மக்கள் வணங்கினர். அவ்வழிபாட்டின் வெளிப்பாடே இந்த மலையப்ப சுவாமி என்றும் கருதலாம். கொடிக்குளம் மலையடிவாரத்தில் ஒரு கிணறு அமைந்துள்ளது. இந்த கிணறு எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை இருப்பினும் இது பல நூற்றாண்டுகளாக மக்களின் தாகத்தை தீர்க்கும் நீராதாரமாக விளங்கி வருகின்றது.
கோயில் அமைப்பு
திறந்தவெளியில், பொய்கைக்கரையில், காணப்படும் ஒரு பீடம் போன்ற அமைப்பே மலையப்ப சுவாமி ஆகும்.
சுருக்கம்
கொடிக்குளம் கிராமத்தில் மிகவும் புனிதமான நீராக கருதப்படும் பொய்கை அமைந்துள்ளது. அங்குதான் மலையப்ப சுவாமி கோயிலும் அமைந்துள்ளது. கொடிக்குளம் கிராமத்தில் மலை தான் பிரதான கடவுளாக வழிபடப்படுகிறது. சிலைகள் இல்லாமல் மலையை கடவுளாக நினைத்து வழிபடும் கொடிக்குளம் கிராமத்தில் சிறிய பீடம் போன்ற அமைப்பே மலையப்ப சுவாமி ஆகும். மிகவும் துடியான சாமியாகவும் வேண்டியதை அருளும் கடவுளாகவும் இந்த மலைச்சாமி கருதப்படுகிறது. விஷக்கடி மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்காக மக்கள் இந்த கிராமத்தில் உள்ள மலையப்ப சாமி கோயிலுக்கு வருவதுண்டு. அப்படி வரும் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்து நலமுடன் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு விஷக்கடி மற்றும் சருமம் சம்பந்தப்பட்ட வியாதிகள் குறித்து சொல்ல வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் ஊர் சார்பில் இருந்து விதிக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
கொடிக்குளம் கிராமத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கிணற்றில் நீர் தானாக சுரக்கப்படுகிறது. இதைத்தான் பல நூற்றாண்டுகளாகவே கொடிக்குளம் மக்கள் அருந்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது வரை கொடிக்குளம் கிராமத்தில் இந்த நீர் மட்டுமே அன்றாடம் பயன்படுத்தப்படும் குடிநீராக உள்ளது.

இந்த நீரானது நீல நிறத்தில், மிகவும் தித்திப்பாக உள்ளது என்கின்றனர். இந்த நீரால் உடலுக்கு அதிக நன்மை என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீரை பருகுவதற்காக வெளியூர்களில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த கிணற்று நீரை எடுப்பதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு பதிலாக அவர்கள் குடும்பத்தில் வேறு யாராவது நீரை எடுத்துச் செல்லலாம். இந்த நீரானது எவ்வாறு சுரக்கிறது என்பது தெரியவில்லை என்கின்றனர்.

மேலும், சிலர் இந்த நீரை குழாய் வழியாக ஊருக்குள் கொண்டு வரலாம் என திட்டமிட்ட போது, ஊர் மக்கள் அதனை தடுத்து இன்றும் அந்த கிணற்றுக்கே சென்று நீரை எடுத்து வருகின்றனர். ஏனெனில், 'நல்லதை தேடி நாம்தான் போக வேண்டும்' என்ற கருத்தை இவ்வூர் மக்கள் கொண்டுள்ளனர். அதுப்போலவே இன்றளவும் செருப்பு அணியாமல் பொய்கையில் இறங்கி அந்த கிணற்றில் மக்கள் நீரை எடுத்து செல்கின்றனர். இங்குள்ள பொய்கையும், கிணற்று நீரும் கொடிக்குளம் கிராமத்தின் வரலாற்று பக்கத்தில் இடம்பெறும் முக்கிய சின்னங்களாகும். இக்கோயிலுக்கு மிக அருகில் வேதநாராயண பெருமாள் என்ற வைணவத் தலமும் உள்ளது.
தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பிள்ளையார் கோயில், விஷ்ணு கோயில், மற்றும் பொய்கை உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடிக்குளம் பேருந்து நிலையம், புதுப்பட்டி பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை ரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்.
தங்கும் வசதி
மேலூர், ஒத்தக்கடை
புகைப்படங்கள்

ராணி, ஜென்சி

ராணி, ஜென்சி

ராணி, ஜென்சி

ராணி, ஜென்சி