Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

ஐராவதேஸ்வரர் கோயில்

Airāvateswarar Temple

கோயிலின் வேறு பெயர்

திருவக்னீசுவரமுடைய பரமசுவாமிகள், திருவக்கீசுவரமுடைய நாயனார், திருக்குறு முள்ளுர்த் தேவர்


பிற தெய்வத்தின் பெயர்கள்

மீனாட்சி அம்மன்


தலத்தின் சிறப்பு

இத்தலத்தில் சிவன் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பாகும்.


ஊர்

ஆனையூர்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
ஐராவதேசுவரர்
தல மரம்
வில்வம்
கோயில் குளம்/ஆறு
பொற்றாமரைக்குளம்
பூசைக்காலம்
காலை 6.30-12.00 முதல் மாலை 4.00-8.30 வரை வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது, அபிஷேகம் செய்வது, மீனாட்சி அம்மனுக்கு புடவை சாத்துவது, கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடைகள் அளிப்பது போன்ற வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கின்றனர்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்கள் கோயில்
கல்வெட்டு / செப்பேடு
இக்கோயிலில் பொது ஆண்டு 10 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர் மற்றும் நாயக்கர் ஆட்சி கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழன் தலை கொண்ட வீரபாண்டியனின் ஏழாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு (பொது ஆண்டு 953) கோயிலின் காலத்தால் மிகவும் பழமையான கல்வெட்டாகும். கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் திருக்குறுமுள்ளூர் என்றும் கோயில் இறைவனின் பெயர் திருவக்னீசுவர நாயனார் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீரபாண்டியன் காலத்தை சேர்ந்த நான்கு கல்வெட்டுகளுள் மூன்று கல்வெட்டுகள் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன.

இக்கோயிலிலுள்ள மீனாட்சி சந்நிதியில் திருப்பதிகம் பாடப்பட்டதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. திருக்குறுமுள்ளுர்க் கோயிலில் திருப்பதிகம் பாடும் உரிமையை அம்பலத்தாடி வெண்காடன் என்ற திருபுவனத் தொண்டன் பெற்றிருந்தார். இவரது பணிக்குரிய ஊதியமாகக் கோயிலில் இருந்து தினமும் ஒரு தூணி நெல் பெற்றதையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரபாண்டியன் கல்வெட்டுகளுள் ஒன்று மூர்க்க விச்சாதீரப் பல்லவரையனான சாத்தன் தமிழன் என்பவன் விளக்கு தானமளித்ததாக கூறப்படுகிறது. பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் தனது பெயரில் சுந்தரபாண்டியன் சந்தி என்று விழா எடுத்துள்ளான் என்றும், வணிகக் குழுவைச் சேர்ந்த ஒரு வியாபாரி இக்கோயில் மூலவரின் அபிஷேகத்திற்காக பால் கொடையாக வழங்கியுள்ளார் என்றும். பூண்டான் சோலை என்னும் தேவரடியார் 16 பலம் எடை கொண்ட வெண்கலத்தால் செய்யப்பட்ட இரண்டு திருவடி நிலைகளைக் கொடையாக வழங்கினார் என்றும், நக்கன் இரட்டியூர் என்னும் தேவரடியார் தனது மகள் நக்கன் கண்டி என்பவளது நினைவாக இக்கோயிலுக்கு 50 ஆடுகளை ஒரு நொந்தா விளக்கெரிப்பதற்குக் கொடையாக வழங்கியுள்ளார் என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மற்றொரு கல்வெட்டில் தாமோதிர பரஞ்சோதி என்பவர் இக்கோயிலுக்கு ஒரு நொந்தா விளக்கை எரிப்பதற்கு 25 ஆடுகளை வழங்கினார் என்று சொல்லப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தென்கல்லக நாட்டுப் பிரிவிலிருந்த விக்கிரமசோழபுரத்தைச் சேர்ந்த குற்றாலம்நம்பன் இளஞ்சிங்கத்தன்மச்செட்டி என்பவர், மூலவருக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு 16 பசுக்களை கொடையாகக் கொடுத்தார் என்றும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சிற்பங்கள்
நின்ற கோலத்தில் மீனாட்சி சிற்பமும், விநாயகர், சண்டேசர், பைரவர், கார்த்திகேயன், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், இரட்டை விநாயகர்,ஜேஷ்டாதேவி மற்றும் நந்தி ஆகிய பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
துர்வாச முனிவர் தன் சிவபூசையின் பலனாக கிடைத்த மலர் ஒன்றை தேவர்களின் தலைவனான இந்திரனிடம் கொடுக்க ஆசைப்பட்டார். ஆனால் இந்திரன் அம்மலரை அலட்சியப்படுத்தி தன் வாகனமான ஐராவதத்தின் மீது வைத்தார். ஐராவதம் அந்த மலரை தன் தும்பிக்கையால் எடுத்து கீழே வீசியது. இச்செயலால் கடும் கோபம் அடைந்த துர்வாச முனிவர் இந்திரன் மற்றும் ஐராவதம் இருவரையும் சபித்தார். ஐராவதம் தன் தெய்வீகத் தன்மையை இழந்து சாதாரண காட்டு யானையாக மாறி சாபத்தின் பலனை அனுபவித்தது. ஐராவதம் இத்தலத்தில் சிவனை பூசித்து பாவ விமோசனம் பெற்றதால் இத்தல இறைவன் ஐராவதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதுவே கோயிலின் தலவரலாறு கதையாகும்.
கோயில் அமைப்பு
மேற்கு நோக்கி அமைந்த கருவறை, மகாமண்டபம், திருச்சுற்று, வாகன மண்டபம் ஆகியன இடம்பெற்றுள்ளன. கோயிலின் அதிட்டானம் நிலத்தினுள் புதைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையில் ஐராவதேஸ்வரர் சுயம்புலிங்க ரூபத்தில் அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கி அமைந்துள்ள மீனாட்சி சந்நிதி நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். இக்கோயிலின் திருச்சுற்றின் வடகிழக்கு மூலையில் ஒரு விநாயகர் சிற்பமும் திருச்சுற்றின் தென்புறச் சுவற்றின் மூலையில் முருகன் சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் பிரதான நுழைவாயிலைத் தொடர்ந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆறு தூண்கள் கொண்ட முக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இது விஜயநகர காலத்தை ஒத்ததாக கருதப்படுகிறது.கோயில் வளாகத்தில் தற்கால கட்டிட அமைப்புகளும் காணப்படுகின்றன.
தகவல்

க.த. காந்திராஜன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை. சுப்பிரமணிய சுவாமி கோயில், புத்தூர்.
செல்லும் வழி
மதுரையிலிருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து மேற்கே 29 கி.மீ. தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உசிலம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை, திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்

க.த. காந்திராஜன்