Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

இராமலிங்க சுவாமி கோயில்

Ramalinga Swami temple

மூலவர் பெயர்

இராமலிங்க சுவாமி


வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்

பால்குடம் எடுத்தல், உருண்டு கொடுத்தல் (அங்க பிரதட்சணம்), தேர் இழுத்தல், ஊர்வலம் செல்லுதல், ஊடல் நோய்கள் தீர உப்பு மிளகும் வாங்கி அங்குள்ள கிணற்றினுள் போடுவது போன்ற வழிபாட்டுச் சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.


காலம்/ ஆட்சியர்

சுமார் 100 வருடங்களுக்கு மேல் பழமையானதாகக் கருதப்படுகிறது.


ஊர்

அதலை

மாவட்டம்

மதுரை

தல வரலாறு / கதைகள்
இராமலிங்க சுவாமி என்று அழைக்கப்படும் ஒரு துறவி, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் சாத்தியார் அணைக்கு அருகிலுள்ள கல்லுமலை என்ற கிராமத்தில் வாழ்ந்துள்ளார். உடல்நலக் குறைவால் அவர் மரணமடைந்த பின்னர், அவரது உடலை தூக்கிக் கொண்டு வரும் பொழுது அதலை என்ற இக்கிராமத்தில் ஒரு இடத்தில் இறக்கி வைத்தனராம். அந்த நேரத்தில், அவரது ஆன்மா பூமிக்குள் சென்றதாக ஊர் மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக, அவர் அந்த இடத்திலேயே தெய்வமாக வழிபடப்படுகிறார். இருப்பினும், அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் ஆரப்பாளையம் ஆகும். எனவே, இராமலிங்க சுவாமிக்கு இம்மூன்று இடங்களிலும் வழிபாடு நடைபெறுகிறது. இவர் சக்தி வாய்ந்த தெய்வம் என்றும் கூறப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
கோயில் கருவறையில் சிவலிங்கம் காணப்படுகிறது. கருவறைக்கு முன் உள்ள முன் மண்டபமும் மகா மண்டபமும் தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள தூண்களில் புடைப்பு சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயில் வளாகத்தில் மனித உருவ சிலைகளும், கை சிலைகளும் நேர்த்திக்கடனாக செய்து வைக்கப்பட்டுள்ளன.

இராமலிங்க சாமி கோயில் திருவிழா, சித்திரை மாதம் அழகர் ஆற்றல் இறங்கிய பிறகு மூன்று நாட்கள் கழித்து நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவிற்கு பதினோரு நாட்கள் காப்பு கட்டி விரதம் இருக்கின்றனர். ஒற்றுமை மற்றும் நல்லுறவை மேம்படுத்துவதற்காக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஆடு, கோழி போன்றவற்றை கோயிலுக்கு வாங்கி கொடுப்பார்கள். ஆனால், இக்கோயிலில் பலியிடும் வழக்கம் இல்லை.

இராமலிங்க சுவாமி கோயிலில் குருபூஜை விழா சித்தர்கள் வழிபாட்டுடன் இரண்டு 2 நாட்கள் நடைபெறும். அப்போது, அய்யனார் கோயிலில் இருந்து பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து வந்து இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். பெண்கள் கோயில் மரத்தில் வேண்டுதல் பொம்மைகளை வைத்து, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இத்தருணத்தில் சித்தர்கள், அடியார்கள் உணவு சாப்பிடும் இலையை நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் போட்டி போட்டு எடுக்கின்றனர் என கூறப்படுகிறது. நெல், அரிசி, புளி, காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். விழாவிபோது அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்கிறார்கள்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

காணொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி

கேட்பொலி

P.பிரியதர்ஷினி, M. ராஜேஸ்வரி