ஊரின் வரலாற்றுப் பெயர்
சாம்பல் நத்தம்
பெயர்க் காரணம்
சாமநத்தம் என்ற ஊர் மதுரைக்கு தெற்கே சிந்தாமணி நெடுங்குளம் சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரில் அமைந்துள்ள அய்யனார் கோவிலுக்கு மேற்கே உள்ள திடலில் பொது ஆண்டு 7 - ஆம் நூற்றாண்டில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. அச்சமயம் சமணர்களின் ரத்தம் ஆறாக ஓடியதாம் அதனால் சமண ரத்தம் என அழைக்கப்பட்டது. இவ்வூர் பின்னாளில் சாம ரத்தம் எனவும் அதற்கு பின் சாமநத்தம் என்றும் அழைக்கப்பட்டு வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இதற்கு வரலாற்று ஆவணம் ஏதும் இல்லை. எனினும் பிற்கால இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் சடங்குகளில் இக்காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பங்குனிமாதம் உத்திரநட்சத்திர நாளன்று 36-ஆவது திருவிளையாடல் “இரசவாதம் செய்த படலம்” திருப்பூவணத்தில் நடைபெறும். இத்திருவிளையாடலின் போது ஒவ்வொரு வருடமும் மதுரையிலிருந்து அருள்மிகு சோமசுந்தரேசுவரரையும் அன்னை மீனாட்சியையும் திருப்பூவனத்திற்கு எழுந்தருளச் செய்து, இரவு தங்காமல் அர்த்தசாம பூசைக்கு மதுரைக்குத் திருப்பித் தூக்கி வந்து விடுவர். மதுரையைத் திருமலைநாயக்க மன்னன் ஆண்ட போது, இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. ஒருவருடம், பங்குனி உத்திரநாளன்று இவ்வாறு அன்னை மீனாட்சியையும் அப்பன் சொக்கநாதனையும் திருப்பூவனத்திலிருந்து மதுரைக்குத் திரும்பித் தூக்கி வரும்போது வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இருந்தது. எனவே சுவாமியையும் அம்மனையும் வெள்ளத்தைக் கடந்து தூக்கிச் செல்ல முடியவில்லை. சிலைமான் என்ற ஊருக்கு அருகில் உள்ள கீழடி என்ற ஊரின் வழியாகத் தூக்கிச் செல்ல முயன்றனர். கால்வாயிலும் வைகையாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மனித முயற்சிகள் பயனளிக்க வில்லை. நிலைமையை உணர்ந்து கொண்ட திருமலைநாயக்க மன்னன் அருகில் உள்ள ஊர்களில் எல்லாம் பறையறிவிக்கச் செய்தார்.
அர்த்த சாமத்தில் ‘மதுரையம்பதியின் முதல்வன்‘ ஆற்று வெள்ளத்தைக் கடக்க முடியாமல் இருப்பதை அறிந்து ஓடிவந்தனர் உதவினர். மீனாட்சியும் சொக்கனும் நல்லபடியாக மதுரைக்குத் திரும்பிச் சென்று அர்த்தசாம பூசையில் கலந்துகொண்டனர். மன்னன் திருமலை நாயக்கனும் நிம்மதியாக உறங்கி எழுந்தார். எழுந்தவுடன் அமைச்சரை அழைத்து, தங்களது உயிரையும் பொருட்டாக மதியாமல் அர்த்த சாமத்தில் வந்து உதவிய அனைவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டார். உதவியோர் அனைவருக்கும் ஒரு கிராமத்தையே தானமாக வழங்கினார். சாமத்தில் வந்து உதவியோருக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதால், அந்தக் கிராமத்திற்குப் பெயர் ‘சாம நத்தம்‘ என்ற பெயர் உண்டானது.
வீடுகளின் எண்ணிக்கை
100 - 200
ஊர்
சாமநத்தம்
மாவட்டம்
மதுரை