Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Cultural e-landmark magazine
Left Arrow

திருவாதவூர் வரலாறு

History of Thiruvadhavur

ஊரின் வரலாற்றுப் பெயர்

திருவாதவூர்


பெயர்க் காரணம்

இவ்வூர் ’வாதவூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பல சமய தத்துவவாதிகள் கூடி வாதம் புரிந்ததால் ('வாதம்' என்பதற்குத் 'தர்க்கம்' என்றொரு பொருளுள்ளதால்) இவ்வூருக்கு 'வாதவூர்' என்று பெயரேற்பட்டதாக கூறப்படுகிறது. மாற்றுக் கருத்தாக, இது வாயுபகவான் சிவனை வழிபட்ட தலம் என்பதால் இவ்வூர் இறைவனுக்கு ’வாதபுரி ஈஸ்வரன்’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது.


வீடுகளின் எண்ணிக்கை

1500


ஊர்

திருவாதவூர்

மாவட்டம்

மதுரை

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
10
ஊர் வரலாறு

சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்ததால் இவர் 'திருவாதவூரர்' என்று பெயர் பெற்றார். சங்க காலத்துப் புலவர்களுள் ஒருவரான கபிலரும் திருவாதவூரில் பிறந்தவராவார். திருவாதவூரிலுள்ள ஓவாமலையில் பொது ஆண்டிற்கு முன் 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றில்,

1. பாங்காட அர்இதன் கொட்டுபிதோன்

2. உபசன் பர்அசு உறை கொட்டுபிதோன்

ஆகிய வாசகங்கள் உள்ளன. எனவே இவ்வூரில் சமணத் துறவிகள் வாழ்ந்துள்ளனர் என்பதும், சங்க காலத்திலிருந்தே இவ்வூர் சிறப்புடன் விளங்கி வருகிறது என்பதும் தெளிவாகிறது.

கூடுதல் விவரங்கள்

திருமறைநாதர் கோயிலில் மாணிக்கவாசகரின் தந்தையார் அர்ச்சகராகப் பணிபுரிந்தார் என்றும், மாணிக்கவாசகர் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்தாரென்றும் சொல்லப்படுகிறது. எனவே, இக்கோயிலில் மாணிக்கவாசகரின் உலோகத் திருமேனி வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இத்திருக்கோயிலில் பொது ஆண்டு 12 ஆம் நூற்றாண்டு முதல் அண்மைக் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் பல உள்ளன. இக்கல்வெட்டுக்களிலிருந்து திருவாதவூர் ’தென்பறப்பு நாடு’ என்ற நாட்டுப் பிரிவிற்குள் இருந்ததையும், இச்சிவாலயம், 'திருவாதவூர் உடையார் திருமறை நாயனார் கோயில்' என்று அழைக்கப்பட்டு வந்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

பொது ஆண்டு 14 ஆம் நூற்றாண்டளவிலேயே, இவ்வூரிலுள்ள ஏரிக்கு ’உலகளந்த சோழப் பேரேரி’ என்ற பெயர் இருந்துள்ளது. இவ்வூரில் உள்ள பிடாரி கோயிலுக்குப் பின்புறம் சதிக் கோயில் ஒன்றும் உள்ளது. சிவன் கோயிலுக்குத் தென்புறமுள்ள தெருவில் விளக்குத் தூண் ஒன்று உள்ளது. இது 12.12.1911 இல், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியச் சக்கரவர்த்தியாக டில்லியில் முடி சூட்டிக் கொண்டதன் நினைவாக நடப்பட்டுள்ளது.

தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

குறிப்புகள்

மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு, பக்கம் 126.§

புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்